மதுரையை மையமாகக் கொண்டு ராமேஸ்வரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு செல்லும் வகையில் தனியார் ஹெலிகாப்டர் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளதால், மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் இந்த இடங்களுக்கு பயணம் செய்ய முடியும்.
இந்த சேவையின் முக்கிய சிறப்பம்சமாக மதுரையில் இருந்து திருச்செந்தூர், ராமேஸ்வரம் மற்றும் கொடைக்கானலுக்கு சுமார் 30 நிமிடங்களில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவுக்கு சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்களிலும் பயணம் செய்ய முடியும். ஒரு ஹெலிகாப்டரில் அதிகபட்சம் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும், ஒரு மணி நேரப் பயணத்திற்கு சுமார் ரூ.1.60 லட்சம் கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை சுற்றுலாவை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவை, வணிகப் பயணம் மற்றும் முக்கிய அவசரகால தேவைகளுக்கும் பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா மையமாக வளர்ந்து வரும் நிலையில், இத்தகைய விரைவான வான்வழிப் போக்குவரத்து வசதி மதுரையின் சுற்றுலா வளர்ச்சிக்கும், அருகிலுள்ள முக்கிய தலங்களுக்கான இணைப்புக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Namma Madurai
Local News & Updates