Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு 'டபுள் கேட்' சுற்றிச் சுற்றி செல்லும் டாக்டர்கள், பணியாளர்கள்
5 hours ago
17 Apr 2026
மதுரை அரசு மருத்துவமனை டீன் அலுவலக மாடியில் உள்ள பொது மருத்துவத் துறை வழியாக மற்ற பிரிவுகளுக்குச் செல்லும் காரிடாரின் வழிகளை இருபக்கமும் 'கேட்' புதிதாக அமைத்து அடைத்துள்ளதால், மற்ற துறை டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சுற்றிச் செல்கின்றனர். முதல் மாடியில் இருந்து ரேடியோலஜி, டெர்மட்டாலஜி, எண்டோகிரனாலஜி, பிளாஸ்டிக் சர்ஜரி துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள், பிற மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் பொதுமருத்துவத்துறை அலுவலகம் உள்ள காரிடார் வழியாகவே சென்று வந்தனர்.
காரிடாரில் உள்ள பொதுப்பாதையை இரண்டு இடங்களில் புதிதாக இரும்புக்கதவு அமைத்து பாதையை மறைத்துள்ளதால் டாக்டர்கள் உட்பட ஸ்ட்ரெச்சர், வீல்சேரில் வரும் நோயாளிகள் ஜெய்க்கா கட்டடம் பின்பகுதியில் உள்ள பாதை வழியாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தால் பழைய, புதிய கட்டடங்களுக்கு இடையிலுள்ள திறந்தவெளி பகுதியில் அனைவருமே நனைந்தபடி தான் செல்ல வேண்டும். கொளுத்தும் வெயிலில் ஸ்ட்ரெச்சர், வீல்சேர் நோயாளிகளுக்கு இதே நிலை தான்.
டாக்டர்கள், பணியாளர்கள் கூறியதாவது: மருத்துவமனை கட்டப்பட்டதில் இருந்து இந்த காரிடார் பொது பாதையாக தான் இருந்தது. ஒருமாதத்திற்கு முன் அடைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டீன் அலுவலகத்திற்கு செல்வதற்கு கூட நான்கு வழிகள் உள்ளன. அதை யாரும் அடைத்ததில்லை. ஆனால் பொதுமருத்துவத் துறை அலுவலகத்திற்கு இடைஞ்சல் என்பதால் இரண்டு கதவுகளை அடுத்தடுத்து அமைத்து தடுத்துள்ளது ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றனர். டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டபோது "தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்ததால் பொதுமருத்துவத்துறைக்கு கூடுதல் வசதி தேவைப்பட்டது. இதனால் மற்றவர்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தால் அதுகுறித்து ஆலோசனை செய்யப்படும்" என்றார்.
Namma Madurai
Local News & Updates