மதுரை: "உளுந்து விலை திடீர் உயர்வால் அப்பளம் தயாரிப்புத் தொழில் முடங்கியுள்ளதாக அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அப்பளத் தயாரிப்புக்கான மூலப்பொருளான உளுந்தம் பருப்பு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வரையும், ஒரு கிலோவுக்கு ரூ30 வரையும் திடீரென அதிகரித்துள்ளது. இது இயற்கையான சந்தை மாற்றமா அல்லது செயற்கையான பதுக்கலா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடால் பேக்கிங் பொருட்களுக்கான விலையும் அதிகமாகியுள்ளதால் அப்பளம் தயாரிப்புத்தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அப்பளத் தயாரிப்பை நிறுத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
Namma Madurai
Local News & Updates