பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புலம்பல். அடுத்தடுத்த திருப்புதல் தேர்வுகளால் திணறல்.
- 13 Feb 2026
- 264
- SCHOOL NEWS
மதுரை : மதுரையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தடுத்து திருப்புதல் தேர்வுகள் நடத்துவதால் மனஅழுத்தத்தில் மாணவர்களும், வினாத்தாளை மதிப்பீடு செய்ய முடியாமல் ஆசிரியர்களும் திணறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ல் துவங்குகிறது. தற்போது 3வது திருப்புதல் திருப்புதல் (ரிவிஷன்) தேர்வு பிப்,17 முதல் 21 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து பிப்,23ல் செய்முறை தேர்வு துவங்குகிறது. இதனால் அடுத்தடுத்து தேர்வுகளால் மாணவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிப்.,21 சனி வேலைநாள் இல்லை. பிப்,18 அன்று சாம்பல் புதன். அந்த நாட்களிலும் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு முடிந்த நிலையில், 4 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடத்தி பிப், 10ல் முடிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது திருப்புதல் தேர்வு பிப்.17 முதல் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்.,21 சனி வேலைநாள் இல்லை. அதையடுத்து பிப்.23 முதல் 27 வரை பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்களை கடைசிநேரம் தயார்படுத்த அவகாசம் இல்லை. கடந்த காலத்தில் நடந்தது போல் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இடையே திருப்புதல் தேர்வை நடத்தும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்து மாணவருக்கு வழங்கவும் ஆசிரியர்களுக்கு நேரம் கிடைக்கும். இப்பிரச்னை குறித்து தலைமையாசிரியர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றனர்.
Add Listing