போடி-மதுரை ரயில்.. தெனிக்கு தெற்கு ரயில்வே சொன்ன நல்ல செய்தி.. 10ம் தேதி முதல் எல்லாமே மாறுது
- 08 Feb 2025
- 264
- LOCAL EVENTS
தேனி: போடி-மதுரை இடையேயான ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்துவிட்டதால், மின்சார என்ஜின் மூலம் போடி-மதுரை இடையே ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து போடி-மதுரை இடையே இயக்கப்படும் ரயிலில் இருந்து டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, தற்போது மின்சார என்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் மதுரை-போடி பயணிகள் ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-போடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது
போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி, கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் எல்லாம் முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதன் பிறகு போடி வரை பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மதுரை-போடி இடையே பயணிகள் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை சென்று வந்த மதுரை அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் சென்னை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையமாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை-போடி இடையே தினசரி ரயிலும், போடி-சென்னை இடையே வாரம் 3 நாட்கள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் என்ஜின்கள் மூலம் இந்த ரயில்கள் தற்போது வரை இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. அண்மையில் மதுரையில் இருந்து போடி வரை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அகல ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை கடந்த வாரம் தொடங்கியது. சென்னையில் இருந்து போடிக்கு வரும் ரயில், மதுரை வரை மின்சார ரயிலாகவும், மதுரையில் இருந்து போடிக்கு டீசல் என்ஜின் ரயிலாகவும் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில் நேற்று போடி வரை மின்சார ரயிலாக வந்து செல்கிறது. இதேபோல் மதுரையில் இருந்து போடிக்கு வரும் தினசரி பயணிகள் ரயிலும், மின்சார என்ஜின் மூலம் வரத்தொடங்கி உள்ளது. இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதால், பயண நேரம் குறைந்துள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "மதுரை-போடி இடையேயான ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. இதனால், மதுரை-போடி இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. சென்னையில் இருந்து போடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை வழக்கமான கால அட்டவணைபடியே இயக்கப்படும். அதன்பிறகு மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக 7.54 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு காலை 8.20-க்கு செல்வதற்கு பதிலாக 8.13-க்கும், தேனிக்கு காலை 8.28-க்கு செல்வதற்கு பதிலாக 8.20-க்கும், போடிக்கு காலை 9.35-க்கு செல்வதற்குப் பதிலாக 9.10-க்கும் சென்றடையும்.