Add Listing
விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு தீர்க்க முடியாதது என்றால் மூன்று பிரச்னை தான்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்

  • 21 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: நீர்ப்பாசன ஆக்கிரமிப்பு, வன விலங்குகளால் சேதம், நெல் கொள்முதல் மைய திறப்பு தாமதம், கமிஷன் என 3 முக்கிய பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தீர்க்க முடியாதா என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வியெழுப்பினர்.

கூட்டத்திற்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ. அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர்கள் சாந்தி, மேரி ஐரின் ஆக்னட்டா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல (டி.என்.சி.எஸ்.சி.) பொதுமேலாளர்கள் சரவணன், மணிகண்டன் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவசாயிகளின் விவாதம்: லாரிகள் வரவில்லை நெல் கொள்முதல் மையங்களில் ஆட்கள், எடையிடும் இயந்திரங்கள், சாக்கு இருந்தாலும் எடையிட்ட நெல்லை மையத்தில் இருந்து லாரிகள் மூலம் குடோவுனுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும். டி.என்.சி.எஸ்.சி.யில் ஒப்பந்தம் செய்த காண்ட்ராக்டர் மூலம் ஒருவாரம், பத்துநாட்கள் தாமதமாக குறைந்த அளவு லாரிகளே வருகின்றன. விவசாயிகள் நெல்லை எடையிடுவதற்காக தினந்தோறும் நெல் கொள்முதல் மையத்திற்கு வந்து காத்திருக்கின்றனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட120 லாரிகளில் 80 லாரிகள் தான் ஓடுகின்றன. மேலும் மூடைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரையான கமிஷனுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நெல்கொள்முதல் மையத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை விவசாயிகளின் பணம் சுரண்டப்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க தனிக்கூட்டம் நடத்த வேண்டும் என கேட்டநிலையில் எங்களுக்கு தெரியாமல் டி.என்.சி.எஸ்.சி. கூட்டம் நடத்தியுள்ளதை கலெக்டர் விசாரிக்க வேண்டும். காட்டுவிலங்குகள் தொல்லை மதுரையில் 50 சதவீதம் மானாவாரி பயிர் தான். விதைகளை விதைத்தவுடன் நிலத்தில் ஊறிய நிலையில் அந்த விதைகளை மயில்கள் சாப்பிடுவதால் சாகுபடி செய்ய முடியவில்லை. மாநகராட்சி எல்லையான மாடக்குளம் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து இரண்டு முறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். வாடிப்பட்டி, உசிலம்பட்டியில், பேரையூர், மேலுார், கொட்டக்குடி, அரசம்பட்டி, நரசிங்கம்பட்டி, பனங்காடி, ஆமூர், அரிட்டாபட்டி பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியவில்லை. காட்டுப்பன்றியைக் கொன்றாலோ, விவசாயிகளின் மாடுகள் வனத்துறைக்கு சென்றாலோ உடனே ஆயிரக்கணக்கில் வனத்துறை அபராதம் விதிக்கிறது. அதுவே காட்டுப்பன்றிகளோ, வனப்பகுதி மாடுகளோ வயலை அழித்தால் குறைந்தபட்ச இழப்பீடே வனத்துறை தருகிறது. மாதந்தோறும் வனத்துறை சார்பில் யாரோ ஒரு ரேஞ்சர் வருகிறார். அவருக்கு எதுவும் தெரியவில்லை. கேரளாவில் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் போல எங்களுக்கு வேட்டையாட அனுமதி கொடுங்கள். அல்லது வயலைச் சுற்றி மானிய விலையில் சோலார் மின்வேலி அமைத்துத் தரவேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சேதம் நீர்வளத்துறையினர் எந்த ஆக்கிரமிப்புகளையும் கண்டுகொள்வதில்லை. கண்மாய், கரை, கால்வாய், மடை சேதம் என்றாலும் அரசுக்கு அனுப்பியுள்ளோம். நிதி வந்ததும் செய்யப்படும்' என மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் அதிகாரிகள் ஒரே பதிலைச் சொல்கின்றனர். சில இடங்களில் நிலவியல் ஓடை இருப்பதால் பட்டாதாரர்கள் தண்ணீரை தடுத்து நிறுத்துவது பற்றி கூறினாலும் பிரச்னையை சரிசெய்வதில்லை. நீர்ப்பாசனதாரர்கள் சங்கம் என்று பெயருக்கு செயல்படுகிறதே தவிர விவசாயிகளை அழைத்து அதிகாரிகள் பேசுவதில்லை. மொத்தத்தில் இது குறைகேட்பு கூட்டமா குறைதீர்ப்பு கூட்டமா என்றே தெரியவில்லை. மாதந்தோறும் அதிகாரிகள் குறைகளைக் கேட்கின்றனரே தவிர அப்பிரச்னைக்கு தீர்வு தருவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் பேசியதாவது: வனத்துறை பிரச்னை குறித்து மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளிக்குடி குண்டாறு பகுதி ஆக்கிரமிப்பு. கல்குவாரி ஆக்கிரமிப்பு குறித்து ஏற்கனவே ட்ரோன் மூலம் படம் எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். டி.என்.சி.எஸ்.சி., மூலம் நெல்கொள்முதல் பிரச்னைக்காக மீண்டும் விவசாயிகளுக்கு கூட்டம் தனியாக நடத்தப்படும் என்றார்.