புதுார் பகுதியின் நீராதாரமான கோசாகுளம் கண்மாயை காப்பாத்துங்க... ஆகாயத்தாமரை, கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
- 23 Feb 2026
- 264
- LOCAL EVENTS
புதுார்: மதுரை புதுார் பகுதியின் நீராதாரமான கோசாகுளம் கண்மாய், ஆகாயத் தாமரை சூழ்ந்தும், கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடாகவும் உள்ளது. கண்மாயை துார்வாரி தண்ணீர் தேக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்ப்பார்க்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் இன்றி, சாத்தையாறு அணையில் இருந்து பாசனநீர் வாய்க்கால் வழியாக கண்மாய்க்கு நீர்வரத்து வந்தது. தற்போது கண்மாயின் வடக்கில் மகாலட்சுமி நகர், மேற்கில் காந்திபுரம், பாண்டியன் நகர், கிழக்கில் லுார்து நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலக்கிறது. துார்வாரப்படாமல் ஆகாயத் தாமரை படர்ந்தும், கருவேல மரங்கள் சூழ்ந்தும் காணப்படுகின்றன. நீர் வெளியேறும் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுகிறது. கண்மாய் ஓரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
இக்கண்மாய் நிரம்பி அருகில் உள்ள கல்குளம் கண்மாய்க்குச் செல்கிறது. அதுவும் துார்வாரப் படாமல் புதர்மண்டியுள்ளதால் டி.ஆர்.ஓ. காலனி, ராம வர்மா நகர், சங்கர் நகர், மண்மலை மேடு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அப்பகுதியினர் கூறியதாவது: இக்கண்மாய்களில் நீர் நிரம்பினால் மறுகால் பாய்ந்து புதுார் வழியாக வண்டியூர் கண்மாய் செல்லும் ஆக்கிரமிப்புகளால் கண்மாய் பரப்பளவுடன், அதற்கான நீர் வரத்தும் குறைந்துள்ளது. துார்வாரப்படாததால் சிறிதளவு நீரையும் தேக்க முடியாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கால்நடை வளர்ப்போர் சாணங்களை கொட்டுவதும் தொடர்கதையாகியுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் புதர் மண்டி, பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கோடை காலம் தொடங்க உள்ளதால் நீரை தேக்கும் விதமாக கண்மாயை துார்வாரி, கருவேல மரங்களை அகற்றி நடைபாதை அமைத்து சீரமைக்க வேண்டும் என்றனர்.
Add Listing