Add Listing
வருமானமின்றி

வருமானமின்றி தவிக்கும் விவசாயிகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு

  • 09 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கண்மாய்களுக்கு வைகை நீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இங்கு தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் என 10க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. இதன்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், அதிக மழை பெய்தால் மட்டுமே இக்கண்மாய்கள் நிரம்பும். இவை முழுமையாக நிரம்பினால் மட்டுமே ஒரு போகம் நெல் விவசாயம் செய்ய முடியும்.

கண்மாய் நீரை நம்பியிருந்த விவசாயிகள் 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வருமானமின்றி தவிக்கின்றனர். நாற்றுகளை பாதி விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படும் விவசாயிகள், முற்றிய நாற்றுகளை மாடுகளுக்கு உணவாக அளிக்கின்றனர். பலர் தங்கள் விளைநிலங்களை விற்றுவிட்டனர். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோர் நீரை விலைக்கு வாங்கி பயிரிடுகின்றனர். நோய்,பூச்சி தாக்குதல் காரணமாகவும், விலை சரிவு காரணமாகவும் காய்கறியை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்தனர். எனவே நீண்ட கால பயிர் சாகுபடி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை நீரை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் முழு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும். குறுகிய கால பயிர்களை பயிரிட வசதி ஏற்படுத்த வேண்டும். மானாவாரி விவசாய உற்பத்தி பொருளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் முழு மானியத்துடன் கடன் வழங்கி கறவை மாடுகள், ஆடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மானாவாரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.