எஸ்.ஐ.ஆர், பணிகளுக்குப் பின்னரும் விண்ணப்பித்தோர் 1.5 லட்சம் பேர்: மதுரையில் பிப்.17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
- 12 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர், பணிகளுக்குப் பின் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கென 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதை பரிசீலித்து பிப்.17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர், எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவங்கின.
மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 27 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். கடந்த நவ.4 ல் துவங்கிய சிறப்புத் திருத்தப் பணிகள் டிச.4 வரை நீடித்தது. அதில் இறந்தவர்கள், வீடுகளில் ஆட்கள் இல்லாதது. இரட்டைப் பதிவு உள்ளவர்கள் என 3.80 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதன் பின்னர் எஸ்.ஐ.ஆர். பணிகள் இருமுறை நீட்டிக்கப்பட்டன. ஜன. 17ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்பும் எஸ்.ஐ.ஆர், பணிகள் ஜன30 வரை நீட்டிக்கப்பட்டது.
இக்காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க (படிவம் 6) ஒரு லட்சம் பேரும், நீக்கம் செய்ய 9 ஆயிரம் பேரும், முகவரி, பெயர், தொகுதி மாற்றத்திற்கு 41 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதை ஆய்வு செய்து பிப்.17 ல் வாக்காளர் இறுதப்பட்டியலை கலெக்டர் வெளியிட உள்ளார். அதன்பின்னும் சேர்த்தல், நீக்கலுக்காக விண்ணப்பிக்க படிவம் வழங்கப்படும். தேர்தல் நெருங்கும் வரை இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர பணிகள் தேர்தல் நெருங்கவதையொட்டி நேற்று முன்தினம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் மண்டல அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்களுடன் உதவி மண்டல அலுவலர்கள், போலீஸ் பணியாளர்கள் என மொத்தம் 870 பேருக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி, அரவிந்த் பயிற்சி அளித்தனர். ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மீளாய்வு செய்து ஒருவாரத்திற்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
Add Listing