நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தண்டனை தராதது ஏன்: விவசாயிகள் சங்கம் கேள்வி
- 21 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007ன் கீழ், இதுவரை ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு கூட சிறைத்தண்டனையோ, அபராதமோ நீர்வளத்துறை விதிக்கவில்லை என தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பாண்டியன் மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம், 2007 ல் இயற்றப்பட்டது. அப்போது ஒரே துறையாக இருந்த பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள ஆறு, ஏரி, குளம், கண்மாய், கால்வாய் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பதே முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைதண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.
18 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டத்தின் கீழ் யாராவது ஒரு ஆக்கிரமிப்பாளரை கண்டுபிடித்து, இவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என தண்டனையோ, அபராதமோ நீர்வளத்துறையினர் விதித்தது உண்டா. சட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில் கண்மாய், கரை, வாய்க்கால், ஆறு அனைத்துமே ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தாத நீர்வளத்துறை அதிகாரிகளால் தான் ஆக்கிரமிப்பு பெருகிவருகிறது. சட்டத்தை மறு வரையறை செய்து கூடுதல் சிறை தண்டனை, கூடுதல் அபராதம் விதித்து தமிழக அரசு திருத்தம் செய்தால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து நீர் நிலைகளை நிரந்தரமாக பாதுகாக்கலாம் என்றார்.
Add Listing