பெண்களைத் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோய் 25ல் ஒரு பெண் இறப்பதால் தடுப்பூசி அவசியம்
- 25 Feb 2026
- 264
- HEALTH NEWS
மதுரை 'கருப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் 25 பேரில் ஒரு பெண் இறக்க நேரிடுகிறது. எனவே எச்.பி.வி, தடுப்பூசி செலுத்துவது அவசியம்" என மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த எச் பி.வி. தடுப்பூசி முகாமில் அரசு மருத்துவமனை மகப்பேறு துறைத்தலைவி காயத்ரி தெரிவித்தார்.
இக்கல்லுாரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் 1500 பேருக்கு எச்.பி.வி., தடுப்பூசி செலுத்தும் இலவச முகாம் நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் துவக்கி வைத்தார். பொதுமருத்துவத்துறைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். துறைத்தலைவி காயத்ரி பேசியதாவது: ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி.,) பெண்களுக்கு கர்ப்பப்பை வாய், பிறப்புறுப்பு பகுதியிலும் ஆண்களுக்கு ஆண்குறியிலும் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் இருபாலருக்கும் ஆசனவாய் புற்றுநோய், தொண்டை வாய் பின்பகுதியில் புற்றுநோய் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 பேரில் ஒரு பெண் இறக்க நேரிடுகிறது.உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி 2 நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். 9 முதல் 26 வயதுள்ளோருக்கு எச்.பி.வி, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வராமல் தடுக்கலாம்
நாளை (பிப்.26) அரசு நர்சிங் பள்ளி, நர்சிங் கல்லுாரி, பிற மருத்துவ துணைபடிப்பு படிக்கும் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை முதல்வர் மல்லிகா, டாக்டர்கள் சுதா, நந்தினி, ரோட்டரி இயக்குநர் வந்தனா பல்லா, நிர்வாகிகள் பார்கவி, கவிதா, பரத்குமார், பிரபாகரன் கலந்து கொண்டனர். மதுரை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சொசைட்டி (மாக்ஸ்), ரோட்டரி கிளப் ஆப் குயின்சிட்டி, மதுரை இன்னோவேட்டர்ஸ் ஏற்பாடுகளைச் செய்தன.
Add Listing