Add Listing
மரக்கன்று

மரக்கன்று மற்றும் பனை விதை நடவுக்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம்

  • 25 Oct 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோகிணி உத்தரவின்பேரில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்படை மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் அதிகமாக நடவு செய்ய மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளில் வீட்டுத் தோட்டம் மற்றும் மூலிகை தோட்டம் அமைத்து மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினம், காடுகள் தினம், மர தினம், ஓசோன் தினம் போன்ற பசுமை தினங்களின் போது விழிப்புணர்வு பேரணிகள், கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி மாணவர்களில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விதைப்பந்து தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மதுரை கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், மேலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.