சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு 4 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தில் தகவல்
- 13 Feb 2026
- 264
- CRIME & SAFETY NEWS
மதுரை, சுகாதார ஆய்வாளர் பணி தேர்வில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்ய தாக்கலான வழக்கில், முறைகேடு குறித்து விளக்கம் கோரி 4 தேர்வர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கதிர் ஜாய்சன் மனு தமிழக சுகாதாரத்துறையில் 1429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2025 டிச.7 ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தேர்வு மையங்களில் அலைபேசி பயன்படுத்த, காப்பியடித்து எழுத அனுமதிக்கப்பட்டனர். இவை தேர்வு மைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. தேர்வை ரத்து செய்ய வேண்டும்.மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பு: மாநிலம் முழுவதும் தேர்வு சுமூகமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கல்லுாரியின் தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 தேர்வர்கள், 2 கண்காணிப்பாளர்கள் மீது வல்லாதிரக்கோட்டை போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசு பணிக்கான தேர்வில் பங்கேற்க தடை விதிப்பது குறித்து 4 தேர்வர்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேர்வு மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதி விசாரணையை பிப்,24 க்கு ஒத்திவைத்தார். அதுவரை பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.
Add Listing