Add Listing
மதுரை

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம்.. முதல்வரால் திறக்கப்படும் 190 கோடி பிரம்மாண்டம்.. எப்போது தெரியுமா?

  • 30 Jan 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் ரூ.190 கோடி மதிப்பில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமுக்கம் சந்திப்பில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமுக்கம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை மேல்தள பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வைகை ஆற்றுப்பால பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்த மேம்பால பணிகள் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. எப்போது பாலம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதி என்றால் அது கோரிப்பாளையம் தான்.இங்கு எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் (குறிப்பாக அண்ணா நகர், கே.கே.நகர் மற்றும் பெரியார் பேருந்து நிலையப் பகுதிகள்) ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் செல்ல ஏவி மேம்பாலம் மற்றும் புதுப்பாலத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம் சந்திப்பில் வந்து குவிகின்றன. கோரிப்பாளையம் பாலம் அவசியம் ஏன் அதேபோல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனை இங்குதான் உள்ளது. அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி உயிர்ப்பலிகள் ஏற்படும் சூழல் அடிக்கடி உருவாவதால், தடையற்ற போக்குவரத்து அவசியம் ஆகும். மதுரை மருத்துவக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் என 24 மணிநேரமும் வாகன நடமாட்டம் அதிகம்.

அமைச்சர் எவ வேலு ஆய்வு கோரிப்பாளையத்தில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவருடன் கலெக்டர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள். தளபதி, பூமிநாதன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சென்றனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை விரைவாக முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோரிப்பாளையம் மேம்பால பணிகள், பிப்ரவரி 10-ந்தேதிக்குள் முழுமையாக முடிவடையும். அதன் பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலத்தை திறந்து வைப்பார். இந்த மேம்பாலத்திற்கு சிறப்பான பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இந்த பகுதி மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த பெயரை முதல்வர் வைப்பார்.