மதுரையில் அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
- 21 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மேலுார் அமலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட திட்ட அனுமதிக்கு முரணாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நிறைவு சான்று வழங்கிய, அவற்றை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், நகர் ஊரமைப்பு இயக்குனர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தமுருகன் ஆஜரானார். மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கை: அங்கீகாரமற்ற மற்றும் கட்டுமான மாறுபாடு தொடர்பாக 32 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 3 கட்டடங்களை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டடம் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு சட்டப்படி 21 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனுமதியற்ற கட்டப்பட்ட கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது அதிகாரிகளின் பொறுப்பாகும். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றார். 21 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத கட்டடங்களை அகற்றுதல் அல்லது கட்டுமானத்தை சரி செய்யும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். மேல்நடவடிக்கை குறித்து ஏப். 22 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
Add Listing