'டெட்' விலக்கு பணி நியமன அரசு உத்தரவு இழுத்தடிப்பு; சிறுபான்மையின பள்ளிகள் அதிருப்தி
- 03 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) விலக்கு அளிக்கப்பட்ட பணி நியமன ஒப்புதல் உத்தரவு இரண்டு மாதங்களாக கல்வித்துறையில் பின்பற்றப்படவில்லை.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டது. அரசு உதவிபெறும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு விலக்கு உள்ளது. இந்நிலையில் 'டெட்' தேர்வை குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றுச் சட்டம் விதிகள் 13.01.2023ல் செயல்பாட்டுக்கு வந்தது. அன்றுமுதல் சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத அனைத்து உதவிபெறும் பள்ளிகளுக்கும் டெட்' தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டது. அதேநேரம் சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது என்பதால் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'டெட்' தேர்வு சிறுபான்மை பள்ளிகளை கட்டுப்படுத்தாது' என நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன.
ஆயிரம் பணியிடம் காலி சிறுபான்மையின பள்ளிகளில் புதிய நியமனங்களுக்கு மட்டுமே டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற புதிய தனியார் பள்ளி சட்ட விதிகளுக்கு முரணாக, பதவி உயர்வுகளிலும் 'டெட்' தேர்ச்சி தேவை என்பதை புகுத்தி, குழப்ப நிலை கல்வித்துறையில் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்குகளும் தொடரப்பட்டன. பதவி உயர்வுகள் வழங்க முடியாததால் 1000க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. புதிய அரசு உத்தரவு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றுச் சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன் உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தும், சம்பளம் வழங்கவும் 24.12.2025ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை மாவட்ட கல்வி அலுவலகங்களில் இதுவரை பின்பற்றவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது: டெட் தேர்ச்சி குறித்த வழக்குகள் தமிழகத்தில் தான் அதிகம் தொடரப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கல்வி அதிகாரிகளின் அலட்சிய போக்கு 24.12.2025 ல் பிறப்பித்த உத்தரவுப்படி 470 ஆசிரியர்கள் மட்டுமல்ல இன்னும் சில நுாறு பேர் பாதித்துள்ளனர். அவர்களுக்கும் விடிவு கிடைக்க வேண்டும். இந்த உத்தரவை மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் பின்பற்றாமல், பதவி உயர்வு நிலை குறித்து தெளிவுபடுத்தவில்லை என்கின்றனர். இக்குழப்பத்தை அரசு தீர்க்க வேண்டும் என்றார்.
Add Listing